நட்பும், கதைத்தலும், சிறு சொதப்பலும்

0

நாம் சில தருணங்களில் சில விஷயங்களை தவற விட்டுவிட்டு பிறகு “சொதப்பிட்டியேடா” என்று பின் தலையில் தட்டிக்கொள்வோம். அதுபோல நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. பதிவர் டோண்டு ராகவன் அவர்கள். பேசுவோம் என்று எதிர்பாராது இருந்த போது சட்டென்று அழைத்தார், பேசினோம். நெடுநாள் பழகிய மனிதர் போல நன்றாகப் பேசினார்.


என் குடும்பம் பற்றி, தாய் தந்தையர் பற்றி விசாரித்தார். பல விஷயங்கள் பேசினார். ஜெர்மன்/ஃப்ரெஞ்ச் கற்பது பற்றிப் பல தெளிவான ஆலோசனைகள் சொன்னார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் பற்றி என்னுடன் நல்லவிதமாகப் பேசிய மனிதர் டோண்டு ஐயா. மதுரையில் பாலாஜி என்றொரு நண்பர் இருக்கிறார். அவர் மட்டுமே “இஸ்ரேல் சொல்லு… ஆம்பளப் பசங்க! எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் சரி, என் நாடு, என் மக்கள்னு நிமிந்து நிக்கறான் பார்.நமக்கும் வந்து வாச்சிருக்கே leaders!” என்பார்.

மற்ற சிலர் இஸ்ரேல் பற்றி நல்ல விதமாகப் பேசினாலும் ” எல்லாஞ் சரித்தான்…. ஆனா பக்கத்துல இருக்குற பாயிங்கள இந்த அடி அடிக்கிறாய்ங்யளேப்பூ!” என்பர். வேறு சிலருக்கு இருக்கவே இருக்கிறது RSS முத்திரை. கூடவே பார்ப்பனீயம். அந்த பாலஜியோடு பேசியது போல ஒரு எண்ணம் டோண்டு ஐயாவுடன் பேசிய போது மனதில் தொடர்ந்தது. குரல் வேறு என்பதால் இது பாலாஜி அல்ல என்று புத்தி சொல்லிக் கொண்டே இருந்தது.

Yet, மிகவும் பயனுள்ள பேச்சு. மனிதரிடமிருந்து கற்க  நிறைய இருக்கிறது. எனக்கு நேற்று ஊருக்குக் கிளம்பும் அவசரம்.  நிதானமாக ஒரு நாள் உட்கார்ந்து பேசி மனிதர் மூளையை X – காப்பி செய்ய முடியுமா பார்க்கவேண்டும்! நிதானமாக மேய்ந்து வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம். (1TB external HDD போதுமா தெரியவில்லை!)

இப்போது சொதப்பிட்டியேடா பாயிண்ட்:

இவ்வளவு பேசிய மனிதரிடம் அவர் குடும்பம் பற்றி நான் விசாரிக்கவில்லை.இதெல்லாம் basicsபா… விட்டுடலாமா… கொஞ்சம் கவனமா இருக்கலாம். காசா பணமா… ரெண்டு நல்ல வார்த்தை…. எந்த மனுஷனும் சந்தோஷமாயிடுவான்…. என்னத்தக் கொண்டு போகப் போறோம்” என்று இது போன்ற ஒவ்வொரு சொதப்பல்களுக்குப் பிறகும் என் தந்தை பொறுமையாகத் தரும் அறிவுரை கைபேசியை வைத்தபின் நினைவுக்கு வருகிறது. 

அரசியல் பேசும் போது பாயிண்ட் பாயிண்டா பேசுவியே! மனுஷாகிட்ட சும்மா ஒரு நாலு வார்த்தை பேசச் சொன்னா பரப்ரம்மம் மாதிரி நில்லு, கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு ஓடு. பெரண்டை far better” என்பது என் தாயார் இது போன்ற தருணங்களில் சொல்லும் வச(வு)னம் என்ன விரட்டினாலும் மனதிலிருந்து போக மாட்டேங்கிறது.

என் மதிப்புக்குரிய முன்னாள் மேனேஜர் ப்ரகாஷ் என்பவர். Review என்று உட்கார்ந்தால் 10க்கு 8, 5க்கு என்றால் 4 என்று தான் மதிப்பெண் தருவார். அவர் தரும் காரணம் “There is always room for improvement. Find out”. என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கல்யாண மண்டபம் தேவை for improvement!!!

இதற்குப் பிறகு டோண்டு ஐயாவுக்கு இருமுறை தொலைபேசிவிட்டேன். விட்டதையும் கேட்டுவிட்டேன். எப்போதும் போல அவர் நன்றாகவே பேசினார். ஆனாலும் முதலில் நான் கோட்டை விட்டது விட்டதுதானே! சொதப்பிட்டியேடா அருணு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *