விசுவரூபம் – சாமானியனின் விமர்சனப் பார்வை.

0

கதை:

விஸாம் என்ற இந்திய இராணுவ வீரனை தாலிபான் – அல் காயிதா நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிஐஏ உதவியுடன் ஆஃபக்னிஸ்தான் அனுப்பி வைக்கிறது இந்திய உளவு அமைப்பு ரா. அங்கே அவர் பல தகவல்களை உளவறிந்து அனுப்புகிறார். ஆனால் அவர் முல்லா உமரால் அடையாளம் காணப்பட்டதும் விஸ்வநாத் என்ற ஹிந்துவாகச் சித்தரித்து நியூயார்க்கில் குடியமர்த்துகிறார்கள். அங்கும் தாலிபான் – அல்காயிதாவை அவர் உளவு பார்க்கிறார். அங்கே நியூயார்க்கில் அதே முல்லா உமர் கும்பல் வைக்கும் அணுகுண்டை புற்றுநோயியல் அணுசக்தி ஆராய்ச்சியாளரான தன் மனைவியின் உதவியுடன் செயலிழக்கச் செய்து உலகைக் காப்பாற்றுகிறார்.

பாராட்டு:


கலை இயக்குநர்: லால்குடி இளையராஜா. இவர் சிறப்பான பணி ஆற்றியுள்ளார். மிகப் பெரிய பெயர் பெறுவார்,

விமர்சனம்:

சவுகரியத்துக்கான திருமணம் என்ற விஷயத்தோடு துவக்கப்படுகிறது படம். வயது வித்தியாசம் பாராது மூத்த ஆண்மகனுடனான திருமணத்துக்கு ஒரு பெண் ஒத்துக் கொள்கிறாள். காரணம் மத்தியதர வாழ்வில் இருந்து விடுபட்டு அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற வெறி (வைராக்கியம் என்று படத்தில் வசனம் சொல்கிறார்கள்.) இன்று வெளிநாட்டு மாப்பிள்ளைகள் சிலருக்கும் இப்படிப்பட்ட திருமணங்களே நடப்பதும், பின் வேறுபல பிரச்சினைகள் சொல்லப்பட்டு லட்சங்களில் பணம் கைமாறி விவாகரத்துடன் முறிவதும் நினைவுக்கு வந்தது. சரி படம் பார்க்கலாம்.

அந்தப் பெண்ணுக்கு தீபக் என்ற பணக்காரத் தொழிலதிபர் மீது ஒரு மையல். அவனுக்கும் அவள் மீது ஒரு கண். கணவன் மீது குற்றமிருந்தால் அதைச் சொல்லி சுலபத்தில் விவாகரத்து பெறலாம் என்று ஒரு உளவாளியை (டிடெக்டிவ் பீட்டர் மணிவண்ணன்) ஏவுகிறாள் அந்த (படுத்துக் கொண்டே படிக்கும் பழக்கமில்லாத) பத்தினி. பத்தினி படிதாண்டினால் மழை பெய்யாது என்று நம்பும் அவள் அமெரிக்காவில் மழை பெய்யாவிட்டால் என்ன பெரிய குற்றம் என்கிறாள். இந்தியனுமில்லாத அமெரிக்கனுமில்லாத அமெரிக்கா வளர்த்த குழப்பத் தேசியவாதி. (ABCD – American Bred Confused Desi).

தனக்குச் சாதியில்லை மதமில்லை பேதமில்லை என்று பல இல்லைகளை இட்டுக்கட்டிச் சொல்லும் கமலஹாசன் சிறு வயதில் தான் வளர்ந்த சமுதாயச் சூழலைத் தாண்டிச் சிந்தித்துத் திரைக்கதை அமைக்கத் திராணியில்லை என்றும் சொல்லி இன்னொரு இல்லை சேர்த்திருக்கலாம். என்ன குறைந்து விடப்போகிறது? திராணி இருந்தும் அப்படித்தான் செய்வேன் என்றால் அவரது சமுதாயச் சார்பின் பின் இருக்கும் திராவிடக் கட்சிகளின் கொள்கை சார்ந்து வளர்த்துக் கொண்ட வெறுப்பு என்றறியலாம்.
(படம் பார்க்கலாமே)

சங்கர் மஹாதேவன் குரலில் எம்எஸ்வி இசையில் ”அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” என்ற பாடலைப் போன்ற மெட்டில் ”உன்னைக் காணாது நானிங்கு நானில்லையே” என்ற பாடலும் (இசை: சங்கர் எஹ்சான் லாய்) அதற்கு பண்டிட் பிர்ஜு மஹாரஜின் கதக் நடனமும் அருமை. கமலஹாசன் தான் நல்லதோர் கலைப் பொருள் என்பதை அதில் நிரூபித்திருப்பார். முகபாவங்களும் நடனத்திறமும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன.

விஸ்வநாத் என்ற பெயரில் வரும் கமலஹாசன் ஒரு முஸ்லிம். தௌஃபீக், நாசர் என்று பல பெயர்களைச் சொல்கிறார். அந்த அரபியில் தொழுதுவிட்டு நடத்தும் சண்டைக் காட்சி அருமை, அதிலும் மீரா குமார் நடந்த சண்டையை சற்றே மெதுவாக நினைத்துப் பார்ப்பதாகக் காட்டும் சிறு ஃப்ளாஷ் பேக் நல்ல உத்தி.

முக்கியக் கதை சொல்லும் நீண்ட  ஃப்ளாஷ் பேச் காட்சியில் கமலஹாசன் விசாம் அகமது கஷ்மீரி என்று அறிமுகமாகிறார். கஷ்மீரத்து அடிமைப்  போராளி (குலாம் கஷ்மீரி ஜிஹாதி) என்று அவரைச் சொல்கிறார்கள். (இந்திய ஜிஹாதிகளை என்ன நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள் அரபு – ஆஃப்கனிய ஜிஹாதிகள் என்பது தெரிகிகிறது.) ஜிஹாதிகளின் பயிற்சியில் இஸ்ரேலியத் தலைவர்களும் அமெரிக்கத் தலைவர்களும் துப்பாக்கி சுடுதல் குறிகளாக வைக்கப்படுகிறார்கள்.  ஓபியம் சர்வ சகஜமாகப் புழங்குகிறது. ஜிஹாதிகளின் பணப் புழக்கம் குறித்துக் குறிப்புக் காட்டப்படுகிறது. ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தில் ஐஎஸ்ஐ  அதிகாரி ஒருவரைக் காட்டுகிறார்கள். ”அவன் பணத்துக்காக வேலை பார்க்கிறான். யார் காசுக்கும் வேலை செய்வான்” என்கிறார்கள்.

ஜிஹாதிகளுக்குக் காசாளராக வேலை செய்பவர் ஒரு அமெரிக்க உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். கோட்டை விட்டதற்காகத் தன் சகாக்களை கமலஹாசன்  கடிந்து கொள்ளும் போது அல்லா மன்னிக்க மாட்டார் என்கிறார். சகாக்களில் ஒருவர் இம்தியாஸ் என்பது என் புனைப் பெயர்… அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

ரா அமைப்பை பாகிஸ்தானிலேயே குஜ்ரால் காலத்தில் செயலிழக்க வைத்தபிறகு ஆஃப்கன் வரை போவது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
படத்தில் இடம் பெறும் பல காட்சிகள் கற்பனை என்று கமலஹாசன் சொன்னார். பிரதமர் மன்மோகன் சிங் பேசுவது போன்ற காட்சியில் அது உண்மை என்று நம்பமுடிகிறது.

படம் முழுக்க திராவிடக் கட்சிகளின் சிந்தனையான வெள்ளைக்காரன் உயர்ந்தவன் என்கிற சிந்தனை ஓட்டம் தெரிகிறது.உதாரணத்துக்கு ஒன்று:

அமெரிக்க போலீசிடம் (FBI) பிடிபட்டு விசாரணையின் போது அந்த நீக்ரோ பெண் அதிகாரி உன் கடவுள் அல்லாவா என்று கேட்க மீரா குமார் அது என் கணவரின் கடவுள். என் கடவுள் நான்கு கைகள் கொண்டவர் என்கிறார். அந்த அதிகாரி நான்கு கைகள் கொண்ட கடவுளை எப்படி சிலுவையில் அறைவீர்கள் என்று கேட்க மீராவோ எங்கள் கடவுளை கடலில் வீசுவோம் என்கிறார். முட்டாள் தனமான கேள்வி பதில். இதில் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் இந்தியர் இன்னொருவர் கருப்பர்.

ஆனால் கடைசிக் காட்சியில் தீவிரவாதியைப் பிடிக்கச் செல்லும் போது அங்கே கமலஹாசன் தொழுகை நடத்துகிறார். என்ன செய்கிறார் என்று ஒரு போலீஸ்காரர் கேட்க மற்றவர் அவர் நமக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார் என்கிறார். கடவுளிடமா என்று கேட்டதும், ”ஆமாம்! ஆனால் இது அராபிய முறை” என்கிறார். இந்த உரையாடல் வெள்ளையர்களிடையே.

சொல்லவரும் கருத்து: கடவுள் விஷயத்தில் வெள்ளையர்களுக்கு இருக்கும் தெளிவு மற்ற இனத்தவருக்கு இல்லை என்பதே. திராவிட கைக்கூலிகளின் கருத்து இதுவே.

மொத்தத்தில் ஆங்கிலப் படங்களைப் போல உளவு, சர்வதேசத் தீவிரவாதம் ஆகியன கொண்ட ஒரு சில சம்பவங்களைக் கோர்வையாக்கி அதில் தம் வழக்கமான ப்ராமணத் த்வேஷத்தையும் மேற்கத்திய மோக அடிமைத்தனத்தையும் கொட்டிக்கலந்து படமெடுத்திருக்கிறார் கமலஹாசன்.

இதற்கு முஸ்லிம் அமைப்புகள் ஏன் இவ்வளாவு தீவிர எதிர்ப்புக் காட்டினார்கள் என்ற கேள்விக்கு அரசியலை கூர்ந்து கவனித்து வரும் நண்பர் ஒருவர் சொன்ன பதில்:

கடலை வியாபாரியிடம் கோடிக்கணக்கில் அமெரிக்கப் பங்கு பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் 2G சம்பந்தப்பட்டது என்று கூறப்பட்டது. முஸ்லிம் போராட்ட விஸ்வரூபத்தில் அது மறைக்கப்பட்டது. பின் எல்லாம் போலி என்பதால் பத்திரங்கள் கடலை வியாபாரியிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை அறிவித்தது.

2G சம்பந்தப்பட்டது தமிழகத்தில் யார் என்பதும் யார் தூண்டுதலில் சில முஸ்லிம் அமைப்புகள் வேலை செய்கிறார்கள் என்பதும் உலகறிந்த விஷயம். ஜெயலலிதாவே காரணம் என்று மூச்சுப் பிடித்துக்கொண்டு சன், கலைஞர் தொலைக்காட்சிகள் கூவியதும் கூறுவது இன்னதென்று புரியவில்லையா???

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *