டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்.

0

டோண்டு என்று இணைய உலகில் குறிப்பாகத் தமிழ்ப் பதிவுலகில் பிரபலமான நரசிம்மன் ராகவன் இன்று நம்மிடையே இல்லை.  சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை என்ற உண்மையைக் கேள்விக்குறியோடு பார்ப்பது போலவே மனம் இந்த உண்மையையும் நம்ப மறுக்கிறது. பொறியாளார், பன்மொழி வித்தகர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், நூலகள் பல வாசித்தவர், உலக அனுபவம் மிக்கவர். அந்த அனுபவங்களைப் பிறரும் பயன் பெறத்தரும் வகையில் பதிவுகள் எழுதியவர். நல்ல நண்பர், சிறந்த ஆலோசகர், நேர்மையான வழிகாட்டி.


தமிழில் பதிவெழுத வேண்டும் என்று ஆரம்பித்த போது படித்த சில வலைப்பூக்களில் இவரது வலைப்பூவும் ஒன்று. ஆனால் இவரது வலைப்பூவில் பலவிஷயங்கள் கதம்பகாக் கமழவே பல நாட்களுக்கு இதுவே பணியாக ஓய்வு நேரங்களில் டோண்டு வலைப்பூவையே படித்துக் கொண்டிருந்தேன்.

பல்லாயிரம் ரூபாய்கள் செலவில் கற்பிக்கப்படும் பல விஷயங்களைப் போட்டு உடைத்திருப்பார். வாடிக்கையாளார் சேவை தொடங்கி வழக்காடல் வரை, பொருளாதாரம், மொழியாக்கம் என்று பல விஷயங்கள் இவரது வலைப்பூவில் கிடைக்கும். தர்க்கம் பற்றி இவர் எழுதிய பதிவு மிகச் சிறப்பு. 

உங்களுடன் பேசவேண்டுமென்று நான் ஒரு பின்னூட்டம் இட்டதும்பதில் பின்னூட்டம் இட்டார். “என் தொடர்பு எண் தரமாட்டேன். இன்னொரு பின்னூட்டத்தில் உன் எண்ணைத் தா, நான் பேசுகிறேன். அந்தப் பின்னூட்டத்தை வெளியிட மாட்டேன்”, என்றார். அனுப்பினேன். 5 நிமிடங்களில் அழைத்துப் பேசினார். ஜெர்மன் மொழி கற்பதில் இருக்கும் ஆர்வத்தை நான் சொல்ல அது குறித்து பல ஆலோசனைகள் சொன்னார். ஆனால் பணி நிமித்தமாக மாற்று மொழி கற்க வேண்டுமென்றால் ஃப்ரெஞ்சு தான் சிறந்தது, பல நாடுகளில் பேசப்படுவதால் தொழில்/வேலை வாய்ப்புகள் அதிகம், ஆகவே ஃப்ரெஞ்சுக்கு முன்னுரிமை கொடுத்துப் படி என்றார். ஜெர்மன் மொழி மீது அலாதிக் காதல் கொண்ட அவர் இதைச் சொன்னது நேர்மையான ஆலோசனை தரவேண்டும் என்பதன்றி வேறெதுவும் இல்லை.

அவர் பதிவுகளைப் படித்த போதே கண்டு கொண்ட ஒரு ஒற்றுமை எங்களிருவருக்கும் இஸ்ரேல் மிகப்பிடிக்கும் என்பது. சுண்டக்காய் அளவே இருந்தாலும் சுற்றிலும் எதிரிகள் சூழ இருந்தாலும் எல்கை தாண்ட யாரும் துணியாத ஒரு உன்னத நிலையில் இருக்கும் நாடு. அது போல பாரதம் மிளிர வேண்டுமென்ற என் அவா அவரது கருத்துடன் ஒத்துப் போனது. ஈழம். அதிமுக உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து வேறுபட்டாலும் இஸ்ரேல் சம்பந்தமாக ஒரு நல்ல செய்தி கண்டால் இருவரும் பறிமாறிக்கொள்வது வழக்கமாகி இருந்தது.

ஹிந்துமத எதிர்ப்பு, குறிப்பாக ப்ராமணர்களை வம்புக்கு இழுக்கும் செயல்களை இவர் கண்டால் விடமாட்டார். ஸ்ரீரங்கம் ப்ராமணாள் கஃபே விவகாரத்தில் திராவிடக் குஞ்சுகள் வாங்கி வாங்கிச் சேர்த்த பின்னும் ஏழை ப்ராமணன் ஓட்டல் வைப்பதை எதிர்ப்பது என்ன நியாயம் என்று தன் பதிவிலும் பல பின்னூட்டங்களிலும் வாங்கு வாங்கென்று வாங்கினார்.

இவரிடம் பிடித்த மற்றொரு விஷயம் போராட்ட குணம். இவர் பெயரை வைத்து அதே போல இணைய அடையாளங்களுடன் ஒரு நபர்
இவர்மீது காழ்ப்புக் கொண்டு பல இடங்களில் இவர் பெயரில் விளையாடினார்,
முடிந்தால் பிடி பார்க்கலாம் என்பது போல இணையத்தில் ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி காட்டிய அந்த நபரைப் போராடிப் பிடித்து முகத்திரையைக்
கிழித்துப் போட்டார். அந்த போலி டோண்டு
படுத்திய பாட்டுக்கு சற்றே முனைப்புக் குறைந்த நபராக இருந்தால் இணையத்தில்
மின்னஞ்சல் தவிர வேறேதும் பார்ப்பதில்லை என்ற முடிவுக்குப் போயிருப்பார்.

எதிரி இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று வைரமுத்து சொன்னது இவருக்குத் தானாகவே நடந்தது. தன் கருத்தை யாருக்கும் அஞ்சாமல் கூச்சம் சிறிதுமின்றி இவர் வைப்பது பலருக்குப் பிடிக்காமல் சாதி, மதம் சொல்லி இவரை மோசமாக ஏசிய நிகழ்வுகள் ஏராளம். அதற்கெல்லாம் அசராமல் தன் நிலையில் நின்ற மனிதர். தன் வாதங்களில் எள்ளளவும் கண்ணியக்குறைவு காட்டியதில்லை. அதீதமாக சாதி, மதம் சொல்லி ஏசினால் சம்பந்தப்பட்ட நபரை தன் வட்டத்தில் இருந்து ஏறக்கட்டிவிடுவார்.

ஈவேரா இவருக்கு ஆகாது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கீழ்வெண்மணி பற்றி விவாதிக்க திராவிடக் குஞ்சுகளை அழைத்து ஓடவிடுவார். ஆனால் அதே ஈவெரா தன் மனைவி இறந்த போது எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு இதற்காக இந்த ஆளைப் பெரியார் என்று ஒப்புக் கொள்வேன் என்றார். எதிரியானாலும் நல்லதை மெச்சும் நற்பண்பு இவரிடம் கற்கவேண்டிய ஒன்று.

புற்றுநோய் அவரைத் தாக்கியது அதிர்ச்சியளித்தது. டிசம்பர் 2011ல் அவர் அது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு உடல்நிலை சிக்கல்  குறித்த பதிவில் All is well  என்ற செய்தியை ஓங்கி ஒலிக்க விட்டிருந்தார்.

புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சைக்குப் பின் பதிவுகளிட்ட போது வழக்கமான துணிவுடன் இருந்தார். 2011ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்துச் சொல்ல அழைத்த போது “அது சரிப்பா! ஆனால் துக்ளக் ஆண்டு விழாவுக்குப் போக முடியலை என்னால. அதுதான் ஒரே வருத்தம். நீ போவியா?” என்றார். நான் என் சொந்த ஊரில் இருந்தேன். சொன்னதும் ”சரி. அப்பா அம்மா கூட நாலு நாள் இரு. வயதான காலத்தில் அது அவர்களுக்கு ஒரு தெம்பு தரும்” என்றார். பெற்றோரைக் கவனித்துக் கொள்வது குறித்து நிறைய அறிவுரைகள் சொல்வார்.

கடந்த ஓராண்டு  இணைய உலகில் அவர் சற்றே மட்டுப்பட்ட வகையிலேயே செய்லாற்றினார். ஆனால் மோடி குஜராத்தில் வென்றதை அப்படி மகிழ்ந்து கொண்டாடினார். சோ எது சொன்னாலும் அதில் ஒரு நியாயமிருக்கும் என்று வாதிடுவார். ஆனால் சில விஷயங்களில் சோ அடிசறுக்கியதை இலைமறை காயாக ஒப்புக் கொண்டும் உள்ளார்.

அலுவலகப் பணிப்பளு காரணமாக அடிக்கடி பேசமுடியாமல் போன நண்பர்களில் இவரும் ஒருவர், இனி நண்பர்களிடம் (குறிப்பாக வயதானவர்களிடம்) மாதம் ஒருமுறையாவது பேசுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.

மரணம் என்ற நிகழ்வு எதிர்பாராமல் வருவது. ஆனால் சிலர் விஷயங்களில் சம்பந்தப்பட்டவரையோ சுற்றத்தாரையோ எதிர்பார்க்க வைப்பதும் உண்டு. ஆனால் இவர் விஷயத்தில் நானறிந்த வரையில் கடைசிவரை செயலாகவே இருந்திருக்கிறார். நல்ல சாவு என்று கிரமங்களில் சொல்வார்கள். அதற்கு மிகவும் கொடுப்பினை செய்திருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இவர் கொடுத்து வைத்த மனிதர் தான்.

தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் உளமார்ந்த பக்தர் டோண்டு ராகவன். நம்முடனான இவ்வுலகப் பயணத்தை முடித்துக் கொண்ட அவரது ஆன்மா தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் மலரடிகளில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Much deserved rest என்று ஆங்கிலத்தில் சொல்வது போல மிகத்தேவையான ஓய்வை இறைவனின் திருவடி நிழலில் அவர் அனுபவிக்கட்டும். சிவோஹம்… சிவோஹம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *