இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துவருகிறது. முன்பு போல இரு சக்கர வாகனங்களின் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. கார்கள் வசதிக்கும் குடும்பத்துடன் செல்வதற்கான ஒப்பீட்டளவிலான கூடுதல் பாதுகாப்பும் கொண்டிருக்கின்றன என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறது.

மேலும் பலர் high end எனப்படும் உயர்தர இருசக்கர வாகனங்கள் பக்கம் செல்கின்றனர். அதற்கு பெருமை உள்ளிட்ட பல காரணிகள் உண்டு.

ஆக இந்த ஸ்கூட்டி, ஆக்டிவா போன்ற சாதாரண ஸ்கூட்டர் வகையறாக்கள் மெல்லச் சரியத் தொடங்கிவிட்டன் என்பதேசந்தை நிலவரம் .

இதை எல்லாம் மீறி உற்பத்தி செய்துவரும் low end வாகனங்களை விற்றுத் தள்ள நிறுவனங்கள் செய்யும் சந்தைப்படுத்தல் உத்திதான் “ஸ்கூட்டர் வாங்க மானியம்” என்று பிகாரிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் செய்திருக்கும் அறிவிப்பு என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இதில் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதுமில்லை. பிரஷாந்த் கிஷோர் பிஹாரில் கொடுத்த திட்டம் இது என்பது உலகறிந்த ரகசியம். பிரஷாந்துக்கும் பிரச்சினையில்லை. அரசியல் கட்சியிடமும் நிறுவனங்களிடமும் ஆலோசகருக்கான கட்டணம் பெற்றுக் கொண்டு போய்விடுவார்,

நாட்டுப் பொருளாதாரம் மேலும் மேலும் இலவசங்களைத் தாங்குமா என்பதே இப்போதைய கவலைக்குரிய விஷயம்.

கேட்பவர்கள் இதைத்தான் கேட்டார்கள் நான் என்ன செய்ய என்று பிரஷாந்தும் மக்கள் இதையே விரும்புகிறார்கள் அதனால் கொடுத்தோம் என்று அரசியல் கட்சிகளும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கிரேக்கம் சலுகைக்கான செலவுகளுக்குத் தன் நாட்டின் தீவுப் பகுதிகளை விற்றது போல நாமும் சலுகைகளுக்கான செலவுகள் கட்டுப்படியாகவில்லை என்று எதையாவது விற்கலாம் என்றால் கச்சத்தீவு கூட நம்மிடமில்லையே விற்பதற்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *