சேட்டன்களின் சென்னைச் சில்மிஷங்கள்??
முல்லைப்பரியாறு அணையின் வலு குறித்த பிரச்சினையே கேரள அரசால் உருவாக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டு பயங்காட்டப்படும் ஒரு அரசியல் நாடகம் என்ற உண்மை பலரால் பல விதங்களில் சொல்லப்பட்டு வந்தாலும் அறிவு ஜீவிகளின் மேடையாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழ்கள் நடுவுநிலை என்ற பெயரில் கேரள சார்புடன் (இடது பக்கம் போய்விட்டு left of the center என்று வெட்கமில்லாமல் சிலர் பேசுவது போல) எழுதிவருகின்றன. கேரள அரசின் தவறுகள் மூடி மறைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் சமாதானமாக இருக்கும்படி எழுதுகின்றன.
சமாதானம் தவறென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பக்கத்தின் தவறுகளை மூடி மறைத்துவிட்டு இருவரும் பேசுங்கள் சமாதானம் செய்துகொள்ளுங்கள் என்பது எப்படி சரியாகும்? சென்னையில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் கேரள அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியும் கேரள மக்களின் கருத்துக்களையும் அச்சங்களையும் மட்டுமே வெளியிட்டு வருவது என்ன நடுவுநிலை? கேரள அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் கூறிய கருத்துக்களை தமிழக ஆங்கில நாளேடுகள் மறைத்துவிட்டன.
கேரள உயர்நீதிமன்றத்தில், “முல்லைப்பெரியாறு அணை உடையும் சாத்தியக்கூறுகள் இல்லை. அப்படியே உடைந்து போனாலும் அங்கிருந்து வரும் தண்ணீரை இடுக்கி அணையில் சேர்த்து பாதிப்பின்றிக் காப்பாற்றலாம்” என்றார் கேரள அரசு வழக்கறிஞர் தண்டபாணி. பின் ஏன் மக்கள் இவ்வளவு அச்சம் கொள்கின்றனர் என்று நீதிபதிகள் கேட்டதற்கு “ஊடகங்களின் தவறான, மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமே மக்களின் அச்சத்துக்குக் காரணம் என்றார் தண்டபாணி. தமிழகப் பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற மூத்த பொறியாளர்கள் பலரும் இதே கருத்தையே கூறுகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் செய்தி தமிழக ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஒரு மூலையில் குறுஞ்செய்தியாகவே வந்தது. அதுவும் கேரளாவில் தண்டபாணி சொன்னதற்கு எதிர்ப்பு வலுத்த பிறகே கேரளாவில் ஒரு முரண்பாடு என்ற அளவில் மட்டுமே செய்தி வெளியிடப்பட்டது. மலையாளப் பத்திரிக்கைகளுக்கு இது வெளியிடத்தக்க செய்தி அல்ல. ஆனால் தமிழகப் பத்திரிகைகளுக்கு?
டேம்999 என்ற பொய்ப்பிரச்சாரப் படம் வெளியிடப் படக்கூடாது என்ற கருத்தும் கூட “தமிழகத் திரையரங்குகள் போராட்டக்காரகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவே” தூக்கதிலிருந்து விழித்தெழச் சொல்லும் நாளிதழ் செய்தி வெளியிட்டது. “முல்லைப் பெரியாறு பிரச்சினை உணர்ச்சிகரமானது, தென் மாவட்ட மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அடிக்கடி அரசியலாக்கப்படும் ஒன்று என்பது ஒப்புக்கொள்ளவேண்டியதே” என்று நச்சுக்கருத்தை நவின்றிருக்கிறது அந்த நாளிதழ்.
முல்லைப் பெரியாறு கேரளாவில்தான் அரசியலாக்கப்படுகிறது, தமிழகத்தில் அல்ல என்பதே உண்மை. ஆனால் கேரள அரசும் மக்களும் ஊடகங்களும் இப்போது செய்துவரும் பொய்ப்பிரச்சாரத்தினால் அதை தமிழகத்திலும் உணர்ச்சிமயமானதாக ஆக்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ஆக, சொல்லப்பட்டிருப்பது மலையாளியின் பார்வையே தவிர நடுவுநிலைப் பார்வை அல்ல. சரி மலையாளி கருத்தை வெளியிட்டார்களே தமிழர் கருத்து எங்கே ஏன் வெளியிடப்படவில்லை?
சம்பந்தப்பட்ட ஆங்கிலப் பத்திரிக்கையின் சென்னைக் கிளை பற்றிய உள்விவரங்களை உற்று நோக்கினால் விடை கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் மலையாளிகள் வசமிருக்கிறது. அரசியல் செய்திகள், நகரச் செய்திகள் முதல் அனைத்தும் மலையாளிகளால் தொகுக்கப்படுகின்றன. சென்னையில் பணியாற்றிய ஒரு பத்திரிக்கையாளர் அந்த ஆங்கிலப் பத்திரிக்கையின் செய்தி அறைகள் முக்கால்வாசி மலையாளிகளால் நிரம்பியுள்ளன, பல்வேறு விஷயங்களில் செய்திகள் தமிழக நலனுக்கு பாதகமாகவே வரும். சேட்டன்கள் கொடிதான் அங்கே பறக்கிறது என்கிறார். அலுவலகத்தில் ஓணம் கொண்டாட அனுமதிக்கும் நிர்வாகம் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கிறது என்கிறார் ஒரு பத்திரிக்கையாளார்.
ஒரு மூத்த பத்திரிகையாளர் 1978ல் மலையாளப் பத்திரிகை உலகில் கொடிகட்டிப்பறந்த மலையாள மனோரமாவின்பேட்ரோஸ் சும்மார் (Patros Chummar) என்கிற பத்திரிக்கையாளர்தான் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க அடித்தளம் போட்டவர் என்கிறார். அவர் கேரள அரசியல்வாதிகளின் முதுகில் தட்டிப் பேசுமளவு செல்வாக்குப் பெற்றவர் என்றும் அவர் போட்ட சாலையில்தான் சாண்டியார் இன்று பயணம் போகிறார் என்றும் அறியப்படுகிறது. அப்போது மலையாள மனோரமா “முல்லைப்பெரியாறு அணை உடைகிறது” என்று செய்தி வெளியிட்டது.
அப்போதைய காங்கிரசுத் தலைவர் கருணாகரன் கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் எம்.கே. பரமேசுவரன் நாயரிடம் இது குறித்துக் கேட்டதும், மின் உற்பத்திக்காக இடுக்கி அணை கட்டி 4 ஆண்டுகளாகத் தண்ணீர் போதுமான அளவில் இல்லாதிருந்ததால் வருத்தத்தில் இருந்த நாயர் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைத்து மிகுதித் தண்ணீரை இடுக்கிக்குத் திருப்பிவிடும் படி நம் சேட்டனிடம்(எம்ஜிஆர்) கேட்கலாம் என்றிருக்கிறார். சேட்டன் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய என்ற கேள்விக்கு விடை தான் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு மூலகாரணம்.
அணை உடையும் என்ற பீதியைக் கிளப்பிவிட்டுச் சேட்டனிடம் கேளுங்கள் என்றாராம் நாயர். கருணாகரன் தலையாட்ட மலையாள மனோரமா மைபோட்டுக் கிளப்பிய பீதிதான் முல்லைப் பெரியாறு உடையும் என்ற கட்டுக்கதை. அன்று துவங்கியது டேம் 999 வரை வந்திருக்கிறது. வங்கத்தில் பங்கப்பட்டும் கேரளாவில் கேவலப்பட்டும் நிற்கும் கம்யூனிஸ்டுகள் பாம்பும் சாகக்கூடாது தடியும் உடையக்கூடாது, பார்த்து பதவிசாக மெல்ல மெல்லப் பேசித்தீர்க்கவேண்டும் என்று கருணாநிதியின் கடிதங்கள் போல வெண்டைக்காயை விளக்கெண்ணை சேர்த்து வதக்கி வைத்த மாதிரி வழவழ கொழகொழ என்று பேசுகிறார்கள்.
காவிரியைக் கோட்டைவிட்ட கோமகன் கருணாநிதி சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு தில்லியில் மத்திய அரசு என்ன செய்தாலும் ஜே போட்டுக் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றிவிடுவார். கனி இனியும் கசந்து விடக்கூடாது என்ற பெற்ற மனமல்லவா அது? வைகையில் வராத தண்ணீர் என் கண்களில் வருகுது பார் உடன்பிறப்பே என்று கடிதம் எழுதிக் கடமையாற்றுவார் அவர். திமுகவுக்கு வாக்களிக்காத சோற்றாலடித்த பிண்டம் தமிழனுக்கு அதுவே அதிகமல்லவா?
சரி, ஆங்கிலப் பத்திரிக்கையாளர்கள் மீதான மலையாளச் சார்பு பற்றிய குற்றச்சாட்டு உண்மைதானா? டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை Resident Editor திரு. சுனில் நாயர். ‘இந்து’ நடுவுநிலை தவறி மாமாங்கங்கள் ஆகிவிட்டன. ‘இந்து’ இதழிலிருந்து விலகிய பலரும் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு நபரின் சர்வாதிகாரம். அங்கே நடுவுநிலை எதிர்பார்ப்பது கி.வீரமணி ஊரறிய சாமி கும்பிடுவது போலத்தான். நடவாது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழகச் செய்திகளில் முல்லைப்பெரியாறு குறித்து ஆங்காங்கே செய்திகள் வந்தாலும் சேட்டன்களின் பக்கமிருந்து வருவதைவிடக் குறைவே. ஆகவே ஆங்கிலப் பத்திரிக்கைகள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலைத் தரவேண்டும். தமிழக நலனுக்கு மாறான கருத்து தமிழகத்தில் இருந்து எழுதப்படக்கூடாது.
இப்போது Times of India பத்திரிக்கை இந்தப் பதிவின் பல கருத்துக்களுக்கு ஆதாரமாய் விளங்கிய Weekend Leader பத்திரிக்கையின் மீது ஒரு கோடி ரூபாய் நட்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தங்கள் பத்திரிக்கை ஒரு நடுவுநிலை தவறாத பத்திரிக்கை தர்மம் வழுவாதது என்றும் இத்தகைய கட்டுரையின் மூலம் தங்களின் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிட்டது என்றும் கூறியுருக்கிறது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல குற்றச்சாட்டுகளுக்கும் முல்லைப்பெரியாறு அணை வலுவானது என்ற உண்மை நிலையையும் பிரதிபலிப்பதாக அது இல்லை.
