இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கருணாநிதி ஆதரவு ஏன்?

0

அழகிரியும் ஸ்டாலினும் இராவணன் – கும்பகர்ணன் மாதிரி வாழட்டும்! என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் – திமுக தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறியுள்ளார்.துக்ளக்கில் இதை வழக்கம் போல தோல்வியின் சகுனம் என்று நக்கலடித்து ஒரு கேலிச் சித்திரம் வந்தது. உடனே ஐயகோ பார்ப்பனீயம் என்று சுயதம்பட்ட பகுத்தறிவுவாதிகள் கூவுகிறார்கள். அட விவரம் கெட்டவர்களே!! இது கருணாநிதி முயன்று தோற்கும் திசை திருப்பல்களில் ஒரு வகை.

திராவிடர் கழகத்து வீரமணி தனியே நின்று மானம் காப்பீர் என்று கோரிக்கை வைக்கிறார். கருணாநிதி மானமிகு சுயமரியாதைக்காரர் என்றும் சொல்கிறார். (ஆளும் கழகம் எதுவாயினும் அண்டிக்கொண்டு சில பல  லட்சங்களை வாங்கிச் சேர்த்த வீரமணி மானங்கெட்ட சுயமரியாதைக்காரர் என்று கொள்ளலாமா?)  வின்னர் படத்தில் வடிவேலு பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது. “இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்யடா“.

கனிமொழி மீதும் ராசாத்தி அம்மாள் மீதும் இன்னபிற நோட்டுக்கள் வாரிய சில்லறை கதாபாத்திரங்கள் மீதும் வரும் சிபிஐ சோதனைகளை மானமிகு சுயமரியாதைக்காரர் என்ற பட்டத்தால் நிறுத்த முடியுமா? மானமென்ன மரியாதை என்ன போனதென்ன வந்ததென்ன என்ற கணக்குப் பார்க்காமல், வருவாய்க் கணக்கை அல்லவா பார்க்கவேண்டும்! அப்போது தானே வீரமணி உள்ளிட்ட அல்லக்கைகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மானமிக்கவர் என்ற புகழைக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும்!

வீரமணி ஒரு அற்ற குளத்து அருநீர்ப் பறவை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அங்கே போய் சமூக நீதி காத்த வீராங்கனையே என்று பகுத்தறிவு கொப்பளிக்க மானத்தோடு புகழ்ந்து வேண்டியதை வாங்கிக் கொண்டு சுயமரியாதையோடு பெரியார் திடலுக்குப் போய்விடுவார். திகாருக்கும் புழலுக்கும் போகப்போவது திககாரர்களல்லவே, திமுககாரர்கள் தானே? இதெல்லாம் யோசிக்க வேண்டாமா மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர்?

கனிமொழி வீடு, கலைஞர் டிவி அலுவலகம் என்று துவங்கி மூன்றாவது மனைவியைச் சுற்றிலும் சிபிஐ விசாரணை வலைவிரித்து  விசாரிக்கிறது. இதெல்லாம் வேண்டாமே என்றால் உச்சநீதிமன்றம் கோபிக்குமே என்று உச்சுக் கொட்டுகிறார்கள் காங்கிரசார். அவரும் என்ன தான் செய்வார், பாவம். திசை திருப்ப எவ்வளவோ செய்து பார்த்துவிட்டார். முடியவில்லை. கடைசியில் போனால் போகட்டும் போடா என்று பாடவேண்டிய கட்டத்தில் சற்றே கெத்து காட்டும் வகையில் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று பாடுகிறார்.

இலங்கையில் தன்னின மக்களின் அழிப்புக்குக் அமைதிகாத்த கலைஞர் இப்போது கோபிப்பதின் காரணம் பதவி வெறிதானே என்று நம் மக்கள் பலரும் கொதிக்கிறார்கள். அவர் இலங்கையை ஆள்வோரை ஆதரிப்பது பகுத்தறிவின் பாற்பட்டது. அதனால் தான் தன் இரு மகன்களைக் கூட இராவணன் கும்பகர்ணன் என்று ஒப்பிட்டிருக்கிறார். இராவணன் முதல் இராஜபக்ஷ வரை இந்திராகாந்தி முதல் வாஜ்பாய் வரை ஆள்வோரை கமுக்கமாகவோ வெளிப்படையாகவோ நேரத்துக்குத தகுந்த மாதிரி ஆதரிப்பது இவரது அரசியல் பாணி. இதுவே பகுத்தறிவுப் பாசறையில் இவர் கற்றுத் தேர்ந்தது!!

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. அரசியல் ஆதரவு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பெற்ற பிள்ளைகளை இப்படி அசிங்கப்படுத்தும் அளவுக்கு இவருக்கு என்ன இக்கட்டு ஏற்பட்டுவிட்டது? யாரி மீது கோபம்? அதை இப்படி ஏன் வெளிப்படுத்துகிறார்? இராவணன் பிறன் மனை விழைந்தவன். எளிமையாகச் சொன்னால் பொம்பளைப் பொறுக்கி. கும்பகர்ணன் நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவன். எளிமையாகச்
சொன்னால் தூங்குமூஞ்சி.

தான் பெற்ற மக்களை இப்படி பொறுக்கிக்கும் தூங்குமூஞ்சிக்கும் ஒப்பிட வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு ஏன் வந்தது? நாகர்கோவிலுக்கு நீயும் நாகர் நானும் நாகர், உனக்கும் எனக்கும் கோவில் என்று விளக்கம் தந்தது போல, நீயும் அரக்கன் நானும் அரக்கன், உனக்கும் எனக்கும் என்னே ஒற்றுமை என்று விளக்கம் அளித்தாலும் ஆச்சரியமில்லை. கொஞ்ச காலமாகவே இவர் இப்படித்தான் உளறுகிறார்.வயதாகிவிட்டதும் காரணமா அல்லது வழக்கமான பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியா தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *