வர்ணாஸ்ரம விதாயினீ – ஒரு பாமரனின் புரிதல்
சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர். தெளிவான புரிதல் இல்லாமல் பேசமாட்டார் என்று பொதுவாக அவர் பற்றியொரு கருத்து உண்டு. அவருக்கு என்ன அழுத்தங்களோ நெருக்குதல்களோ தெரியவில்லை. சற்றே சறுக்கிவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனைக்கே சறுக்குமாம். அவருக்குச் சறுக்கக் கூடாதா?
விவாதம் சாதியச் சிந்தனைகள் மடாதிபதிகளுக்கு இருப்பது பற்றியது. பரமாச்சார்யார் என்று பரவலாக அறியப்படும் காமாக்ஷி அடிசேர்ந்த காஞ்சி மடாதிபதி இறைத்திரு சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அவர்களை இவர் உரிய மரியாதையைத் தராமல் விமர்சித்தார். புத்திசாலிகள் என்றாலே அப்படித்தான் செய்வார்களாம். திருவிளையாடற் புராணத்தில் தருமிக்காக நக்கீரரும் இறையனாரும் வாதிட்டதைச் சுட்டிக்காட்டி நண்பர் ஒருவர் சொன்னார்.
அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படவிரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்ற றுக்கும் கீரனோ எம்கவியைப்
பாரில் பழுதென் பவன்
சங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந் துண்டு வாழோம்…
நாமும் பெரிய புத்திசாலியாக ஆகவேண்டும் என்றிருக்கும் ஆசையை மீள்வரையறை செய்து கொண்டிருக்கிறேன்.ஏனெனில் இறையனாரையோ துறவு பூண்டு, துறவியாகவே வாழ்ந்த மனிதர்களையோ மரியாதைக் குறைவாகப் பேச நான் பெரும் புலமை பெற்ற புத்திசாலியில்லை. நக்கீரரும் இறையனாரை உரிய மரியாதையின்றிப் பேசியதாக வரலாறு இல்லை.
நம் புத்திசாலியார் குறிப்பிடும் மடாதிபதி இறைத்திரு சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியாரின் பல செயல்கள்/கருத்துக்களின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. அவரை தெய்வ அவதாரம் என்று ஆக்க முனைந்திருக்கும் கூட்டத்தின் செயல்களில் எனக்கு அறவே உடன்பாடில்லை. அவர் உபதேசித்ததைப் பின்பற்றாமல் விட்டுவிட்டு அவரை தெய்வமெனத் தொழுவதும், அவர் குறித்துக் கதைகள் புனைந்து அவர் சக்தியைப் பாரீர் என்பதும் நகைப்புக்கிடமான செயல்.
ஆனால் பல சிக்கலான தனிப்பட்ட செயல்களுக்குப் பதிலே தராத ஒரு அரசியல்வாதிக்கு ஏக மரியாதை தரும் நம் புத்திசாலியார் இந்த மடாதிபதி சாதி குறித்த பழங்காலக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதால் அவருக்கு தாம் தரும் மதிப்பே அதிகம் என்கிறார். என்ன அடிப்படையோ புரியவில்லை.
சரி இருக்கட்டும், மடாதிபதியின் சாதியக் கருத்துக்களை எதிர்க்கிறாராமே, புத்திசாலி வேறாயிற்றே… லலிதா ஸகஸ்ரநாமத்தில் இருந்து ஏதோ எடுத்தாண்டு பேசுகிறாரே.. என்னவென்று பார்ப்போம் என்று பார்த்தால் கீழே தரப்பட்டுள்ள விஷயம்.
————————————————————————————————————
பெரியவாள் தரிசன அனுபவங்கள்” எனும் நூலை தனது பக்தி சிரத்தையால் ஒருவர்
மொழி பெயர்த்து 2006 இல் ‘ஹிந்துதர்மாஃபோரம்ஸ்.காம்’ எனும் தளத்தில்
வெளியிட்டுள்ளார். அதிலிருந்து:
13. AbrahmakIta jananI
The nAmA next to this is varNASramaviDHAyinI. Combining these two names,
PeriyavaaL answered a difficult question.
returned after his bhikSA, a bhaktA (devotee) asked: “Since Lalitha
SahasranAnam mentions that AmbaaL is the mother of all this world we all
become sahoDharAs (brothers and sisters). If this is so, why to move
with some people without physically coming in touch with them or
touching them? How is this untouchability appropriate?”
answer is in the very next nAmAvaLi. “AmbaaL who is the Mother of
everyone has also established the niyama (regulation) of varNASrama
(four divisions). She is also the varNASramaviDHAyinI!//
————————————————————————————————————
இது புத்திசாலித்தனமான வாதமாகப் படவில்லையே என்று யோசித்தேன். உடம்பு
சரியில்லாத போது அவருக்காக அவர் பெயரில் யாரேனும் எழுதிவிட்டார்களோ?
முட்டாள்தனமான புரிதலில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கிறதே?
இதற்கு அங்கேயே பதிலளிக்கலாம் என்று போனால் ஜல்லியடிப்பது தவிர இதற்கு வேறு விளக்கம் தர யாருக்கும் இயலுமா என்று முன்முடிபுகள் பூண்டுவிட்டார். ஏரணங்களை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டை ஒருவர் காட்டியபின் அங்கே எது பேசினாலும் ஏற்புடையதாகாது என்று கருதி எனதிடம் வந்துவிட்டேன்.
நிற்க.
ஆப்ரம்ஹ கீடஜனனீ => அற்பப்புழு முதற்கொண்டு ஆதிபகவன் வரையான அனைவருக்கும் தாய்.
வர்ணாஸ்ரம விதாயினீ => வர்ணாஸ்ரமத்தை அளித்து ஆள்பவள்.
(படம்: கூகிளில் தேடி எடுத்தது)
விதாயின் என்ற சொல்லுக்கு அளித்தல், நிர்வகித்தல். ஆளுதல், அதிகாரப்ரயோகம் செய்தல், நடாத்துதல், காரணமாயிருத்தல் என்றெல்லாம் பொருள்.
விதாயினீ என்றால் அளிப்பவள், நிர்வகிப்பவள், ஆள்பவள், நடாத்துபவள், அதிகாரப்ரயோகம் செய்பள், காரணமாயிருப்பவள் என்பதே பொருள்.
வர்ணாஸ்ரமம் என்பது தொழில் ரீதியான குழுக்களாக மாந்தரைப் பிரித்து வைத்த சமுதாயச் செயல்பாடு. இதற்கும் இறையை அடைய வழிகாட்டும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை.
இந்த வர்ணாஸ்ரமத்தை அளிப்பவள், நிர்வகிப்பவள் இதில் அதிகாரப்ரயோகம் செய்பவள் என்று இறைவியை ஏன் சொன்னார்கள்?
இந்தப் பிரிவுகளில் நீ இருக்கும் இடம் உனக்கு இறையளித்த கொடை. இது குறித்து நீ பெருமை கொள். ஆனால் கர்வம் கொள்ளாதே… இதில் உயர்வு தாழ்வு கண்டு கர்வத்தில் கொக்கரித்தால் இந்த ஏற்பாடுகளை நிர்வகித்து அதிகாரம் செலுத்தும் இறைவியால் நீ கீழானது என்று தூற்றும் நிலைக்குத் தள்ளப்படுவாய் என்பது எச்சரிக்கை.
உன்னால் ஆவது இங்கு எதுவுமில்லை. வர்ணாஸ்ரமத்தில் உன் இடம் இறைக் கொடையே அன்றி உன் உயர்வு தாழ்வு ஒரு பொருட்டே அல்ல என்பதைக் குறிக்கவே இந்தப் பெயர் இறைவிக்கு வந்ததாக அறியப்படுகிறது.
எந்தச் சமுதாய ஏற்பாட்டையும் இறையின் துணை கொண்டு செய்வது நீதி பரிபாலனத்துக்கு பேருதவியாக இருக்கும் என்பது மனசாட்சி உயிர்ப்புடனிருந்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு.
இப்போது நம் புத்திசாலியார் கேட்ட லலிதா ஸகஸ்ரநாமக் கேள்விக்கு வருவோம்.
ஆப்ரம்ஹ கீடஜனனீ என்று அனைத்துயிர்களுக்கும் தாயாக அறியப்படுபவளின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டலாமா என்ற கேள்விக்கு, வர்ணாஸ்ரம விதாயினீ என்று பணி சார்ந்த பிரிவுகளை அளித்தாள்பவளே தாய்தான் என்பது பதில்.
ஆக வர்ணாஸ்ரமப் பிரிவுகள் தாயால் தரப்பட்டவை. பணிகளின் வேறுபாட்டைக் கொண்டு பிள்ளைகள் தமக்குள் உயர்வுதாழ்வு பாராட்டினால் தாய் கண்டிப்பாள். திருந்தாவிடில் தண்டிப்பாள். பணி சார்ந்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் அவற்றைக் கொண்டு வேற்றுமை பாராட்டாதே என்று சொல்கிறது லலிதா ஸகஸ்ரநாமம்.
வர்ணாஸ்ரமம் மூலம் வேற்றுமை பாராட்டலாம்னு மஹா பெரியவா சொல்லிவிட்டார் என்று ஏதாவது மூடப்ரக்ருதி சொல்லியிருப்பின் அந்தப் ப்ரக்ருதியைக் கண்டிக்கலாம். அதை விடுத்து லலிதா ஸகஸ்ரநாமம் தீண்டாமையை போதிக்கிறதா என்பது புத்திசாலிகள் கேட்கும் சரியான கேள்வியாகத் தெரியவில்லை.
மேற்சொன்னவை என் பாமரப் புத்திக்கு எட்டியதே. புத்திசாலிகளின் பரந்துபட புத்திக்கு எட்டும் விவரங்களை எனக்கும் விளங்கும் படியாகச் சொன்னால் புரிந்து கொள்ள முயல்வேன். ஸ்ரீ மாத்ரே நம:
