குருவடி வணங்குதும்
குருவே இறையை உணர்த்துவர் அவரையே
முதலில் வணங்குதல் முறை.
குருவின் கருணை பெரிதாம் பணிவே
அதனில் திளைக்கும் வழி.
சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல்
குருவின் திறமே காண்.
குருதரும் ஞானம் அடையத் தேர்ந்திடல்
சீடனின் திறமாம் தெளி.
புலன்களை வென்று புல்லறிவை வீழ்த்துதல்
புரிதலின் முதற்படி காண்.
நடத்தையிற் சிறந்த நல்லதோர் சீடனே
குருவின் உள்ளத்துக் குவப்பு.
பொறுமையொடு சீலமும் பொருந்திய சீடனே
பொற்றாமரை ஞானக் குழவி.
பணிவொடு குருவுக்குப் பணியும் செய்வது
பண்பாளச் சீடன் பாணி
ஞானத்தின் உருவான குருவின் ஆசியினை
ஞாலத்தில் அடைவதே பேறு.
காலத்தால் அழியாத களஞ்சியம் குருவின்
காலடியில் கிட்டும் நிறைவு.
– பார்வதேயன்.