வேண்டுதல்!
இனிமை கூட்டும் தனிமை வேண்டும்
இன்பம் ஊட்டும் துணையும் வேண்டும்
காலம் பார்க்காது பேசிட வேண்டும்
காலம் முழுதும் தொடர்ந்திட வேண்டும்
பசுமை கொண்ட சூழல் வேண்டும்
பகட்டுகள் அற்ற நகரம் வேண்டும்
அவரசம் இல்லா வாழ்க்கை வேண்டும்
அம்புலி ஒளியில் சோறு வேண்டும்
தூய நட்பு கிடைத்திட வேண்டும்
தூமணியாய் அது நிலைத்திட வேண்டும்
ஆணவம் அற்ற மிடுக்கு வேண்டும்
ஆய கலைகள் ரசித்திட வேண்டும்
சாமானியன் போல வாழ்ந்திட வேண்டும்
சாகும் வரையில் செயல்பட வேண்டும்
கட்டுக் கட்டாய்ப் புத்தகம் வேண்டும்
கவலை யின்றிப் படித்திட வேண்டும்
காகிதக் கட்டொடு பேனா வேண்டும்
தமிழைப் புரிந்த கணினியும் வேண்டும்
தங்கு தடையற்ற மொழிவளம் வேண்டும்
சுணக்கம் அறுக்க எழுதிட வேண்டும்
நிறைவாய்ச் செல்வம் கைவசம் வேண்டும்
நிலையாய் மனது நின்றிட வேண்டும்
குறைவான ஆசை மனதில் வேண்டும்
குன்றாது அறங்கள் செய்திட வேண்டும்
நல்ல மனதொடு துணைவி வேண்டும்
நல்ல பிள்ளைகள் இருவர் வேண்டும்
சின்னச் சின்ன ஊடலகள் வேண்டும்
சிறிதும் குறையாத அன்பு வேண்டும்
பாரதம் சீர்பெற உழைத்திட வேண்டும்
பாரினில் நற்பெயர் பெற்றிட வேண்டும்
எளிமை தூய்மை இரண்டும் கொண்டு
உலகம் நல்வாழ உழைத்திட வேண்டும்
என்னில் நானே சலிப்பு கொள்ளுமுன்
மனதில் நிறைவுடன் மரணம் வேண்டும்
மேலே சொன்ன அனைத்தும் வேண்டும்
மேலுள இறைவன் கொடைசெய வேண்டும்!
சிவோஹம்! சிவோஹம்!! சிவோஹம்!!!