நீர்காத்த ஐயன்
தண்ணென்ற நீர்காத்து தாகத்தைத் தணிக்கின்ற
தர்மத்தின் தலை மகனே!
திவாகரனின் ஒளிநாணும் பேரொளித் திருமுகமே
முதுமையின் எழிற் கோலமே!
நீர்காத்த நீர்கொண்டு ஊர்வாழ வழிசெய்யும்
நன்மையின் ஊற்றுக் கண்ணே!
வனத்திலே குடிபுகுந்து மனத்திலே ஆட்சிநெய்யும்
மாலீசன் பெற்ற தனமே!
பூரணியும் புஷ்கலையும் இருபுறத்தே கொண்டமைந்து
புவிகாக்கும் மறை பொருளே!
புண்ணியரைப் பூரணமாய் முப்போதும் காப்பாற்றும்
இதயத்து மணிக் கோவிலே!
காண்போர் தம்கைகூப்ப காணாதார் உளம்பிணிக்கும்
மாசற்ற பொற் பாதமே!
வெண்பட்டு உடுத்திகன கம்பீரத் தோற்றத்துடன்
அமர்ந்தருளும் ஐயன் நீரே!
வெள்ளியிலெ கவசமும் மாணிக்க மணிமுடியும்
மின்னிவரும் திரு மேனியே!
திருக்கோலம் வருணிக்க யானறிந்த தமிழினிலே
சொல்லெனக்குக் கிட்ட வில்லை!
வேரற்ற மரமபோல உம்மடியில் பணிகின்றேன்
வேராகி எம்மைக் காப்பாய்!
பேரருளின் திருவுருவே மெய்ஞ்ஞான முழுப்பொருளே
நீர் காத்த ஐயனாரே!
(இராஜபாளையத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து எமர் வாழ்வு சிறக்க வழிசெய்யும் நீர் காத்த ஐயன் எமது குல தெய்வம். அவர் ‘வடிவுடைநாயகர்’ என்பது நேரிலும் புகைப்படத்திலும் கண்டோர் கூறும் கருத்து. அவர் வரப்பிரசாதி என்பதற்கு வாழ்வோர் சாட்சி.)
