உவகைப் பெருதினம் தை
மனத்தின் மாசுகள் மண்ணொடு போக
நிலத்தின் குப்பை நெருப்பில் பொசுங்க
புகையாய் வானில் புண்ணியம் பெருகிப்
பொங்கி வருவதே தை
நாநிலம் ஒளியில் நாளும் செழிக்க
உயிர்கள் வாழவே உலகச் சுருளை
ஒளியால் நிரப்பி வடதிசை போகும்
கதிரவன் உவப்பதே தை
நல்லோர் மகிழ்ந்து நலமே திகழ
நல்வழி திறந்து நலமுடன் வாழ
உழைப்பின் பலனில் உள்ளம் மகிழும்
உவகைப் பெருதினம் தை
ஒளியும் நிழலும் ஒருங்கே உடன்வர
நாளும் பொழுதும் நற்பெரு வலிவும்
உணவும் நீரும் உவகையும் அளிக்கும்
பரிதியின் தாளில் பணி.
– பார்வதேயன்