கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம்
சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன்
இருளை விரட்ட ஒளியும் தருவேன்
இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால்
இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ.

எம்வழி யதுவோ  இறைவன் தந்தது
எம்பணி எல்லா மவனைச் சார்ந்தது
எழுச்சி தந்தவன் துணிவும் தந்தனன்
எம்முயிர் கலந்த துணிவின் துணையால்
எமர்வாழ வழிசெய அருளும் தந்தான்.

பணம்தரும் பணிகள் பலவும் செய்வேன்
பொருளை எமர்நலம் வாழத் தருவேன்
துன்பம் சூழ்ந்த மாந்தர் சிறக்கத்
துணையாய் நிற்க இறைவனைப் பணிப்பேன்
எனதன் பிறைவனும் அதுவே செய்வான்

உலகில் எங்கோ மூலையில் இருப்பினும்
ஊக்கம் வற்றா துழைக்கும் மக்கள்
உலகம் வாழத் தம்சுகம் குறைத்து
ஊற்றாய் நன்மை பெருக்கும் மாந்தர்
உளமகிழச் செய்தல் உற்றதோர் பணியாம்

இறையை உணர்ந்தோர் எமரே யாவர்
இறைப்பணி  செய்யும் எமரே பெரியோர்
இறையை வாழ்த்தித் தம்மின்பம் குறைத்து
இம்மையும் சிறக்க வழிசெயும் சான்றோர்
இமயம் மிஞ்சும் திறமும் கொண்டோர்.

எமர்வழி எம்மொழி வாழ்க்கை விதிகள்
எள்ளல் செய்தே யார் நகைத்தாலும்
எமை நகையாடியே யார் பிழைத்தாலும்
எள்ளும் நீரும் இல்லா நிலைக்கு
எம்மிறை யாக்கும் எச்சரிக்கை இதுவே…

வஞ்சனை சூது சகுனிப் பேச்சால்
வக்கற்ற சிலரது சூழ்ச்சியின் பேரால்
வயிற்றில் எரிச்சலால் எமரை வைது
வயிற்றுப் பிழைப்பை நடத்தும் மாக்கள்
வயிற்றில் பிறப்போர் விளங்குதல் கடினம்

வாழ்க்கை என்பது குறுகிய காலம்
வாழ்ந்து அமைதியைத் தேடும் படலம்
வாழும் முறைமை குலைந்த இக்காலம்
வாழ்வாங்கு வாழ வழிசொல ஏற்றோர்
வாழ்வின் சாரம் உணர்ந்த எமரே!!

-பார்வதேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *